ராஜீவ்காந்தி அறக்கட்டளை மூலம் பகிரங்க கொள்ளை நடந்துள்ளது - சாம்பிட் பத்ரா
By: Karunakaran Tue, 01 Sept 2020 2:00:43 PM
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்துக்கு சொந்தமாக ராஜீவ்காந்தி அறக்கட்டளை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை பாஜக கூறி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ராஜீவ்காந்தி அறக்கட்டளை சீனாவிடம் நன்கொடை பெற்றதாகவும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து பணம் பெற்றதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சாம்பிட் பத்ரா பேட்டி அளித்தபோது, ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு கிடைத்த நன்கொடைகள் தற்செயலானது அல்ல, அது ஒரு சதி என்பது தற்போது நடந்து வரும் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து தலைமறைவாக இருக்கும் வைர வியாபாரி மெகுல் சோக்ஷியின் மகன் ரோகன் சோக்ஷிக்கு சொந்தமான நவிராஜ் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற போலி நிறுவனம், ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் நன்கொடை அளித்துள்ளதாக கூறினார்.
கடந்த 2012-2013, 2013-2014 நிதியாண்டுகளில் நவிராஜ் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் எந்த வர்த்தக செயல்பாடுகளையும் கணக்கில் காட்டவில்லை. சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கை சந்தித்து வருகிறது. நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கி, ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் நன்கொடை கொடுத்துள்ளது. இது, அவ்வங்கியின் நிறுவனர் ராணா கபூரின் சொந்த பணம் அல்ல. யெஸ் வங்கியில் இருந்து திருப்பி விடப்பட்டது என சாம்பிட் பத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர், ரூ.5 ஆயிரத்து 600 கோடி ஊழல் வழக்கை சந்தித்து வரும் ஜிக்னேஷ் ஷாவின் நிறுவனம் 2011-ம் ஆண்டு ரூ.50 லட்சம் நன்கொடை கொடுத்தது. ஊழல் பணத்தில் பெரும்பகுதியை அளித்தது. ரூ.700 கோடி ஊழல் வழக்கில் சிக்கிய ஜி.வி.கே. விமான நிலைய அறக்கட்டளை, கடந்த 2010 முதல் 2017-ம் ஆண்டுவரை 47 மோட்டார் வாகனங்களை ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு அளித்தது. இவை ராஜீவ்காந்தி அறக்கட்டளை மூலம் எப்படி பகிரங்க கொள்ளை நடந்தது என்பதை காட்டுவதாக கூறினார்.