- வீடு›
- செய்திகள்›
- தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு கூட்டம் பற்றிய அறிவிப்பு வெளியீடு
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு கூட்டம் பற்றிய அறிவிப்பு வெளியீடு
By: vaithegi Fri, 01 July 2022 7:30:37 PM
தமிழகம்: ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி உயர்வு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
அதே மாதிரி இந்த ஆண்டும் அரசு பள்ளிகள், நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் குறித்தான முக்கிய அறிவிப்பை ஒன்றை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் உள்ள அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் கல்வி தகவலியல் மேலாண்மை முறைமை (EMIS) மூலமாக இணைய வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கலந்தாய்வு கூட்டத்தை இணைய வழியாக நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொள்ளும்படி முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது எந்தெந்த தேதிகளில் இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் என்பது குறித்தான அறிக்கையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதாவது அரசு, நகராட்சி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பெயர் பட்டியல் EMIS வழியாக வரும் ஜூலை 11ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வரும் ஜூலை 12-ஆம் தேதியும், நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.