- வீடு›
- செய்திகள்›
- கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்க புனேயின் சீரம் நிறுவனம் விண்ணப்பம்
கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்க புனேயின் சீரம் நிறுவனம் விண்ணப்பம்
By: Karunakaran Mon, 07 Dec 2020 6:56:37 PM
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு சுமார் 6 கோடியே 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, சீனா, இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஆய்வுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டுக்கு கொண்டு வர மருந்து நிறுவனங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இங்கிலாந்தின் ‘பைசர்’ நிறுவனமும், ஜெர்மனியின் ‘பையோ என்டெக்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு கொண்டு வர இங்கிலாந்து, பக்ரைன் நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்தியாவிலும் இந்த மருந்தை பயன்படுத்த அனுமதிக்க கோரி பைசர் நிறுவனம் மத்திய அரசை அணுகியுள்ளது.
இந்தியாவுக்கு எத்தனை கோடி தடுப்பூசி தேவைப்பட்டாலும் அதை உடனுக்குடன் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்க முடியும் என்று பைசர் நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று புனேயின் சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ளது.
தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த இந்த தடுப்பூசி மிகச்சிறந்த முடிவுகளை தந்துள்ளது. எனவே இந்தியாவில் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சீரம் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. மருந்து நிறுவனங்கள் அடுத்தடுத்து அனுமதி கேட்டு படையெடுப்பதால் மத்திய அரசின் இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. எந்தெந்த தடுப்பூசி மருந்துகளை ஒப்பந்தம் செய்து கொள்முதல் செய்யலாம் என்று தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.