புரெவி புயல் 2ம் தேதியில் திரிகோணமலை அருகே கரையை கடக்கும்
By: Nagaraj Tue, 01 Dec 2020 08:32:45 AM
திரிகோணமலை அருகே கரையை கடக்கும்... வங்கக்கடலில் உருவாகவுள்ள 'புரெவி' புயலானது டிசம்பர் 2 ஆம் தேதி மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது கடந்த 26 ஆம் தேதி காலை 2 மணி அளவில் கரையைக்கடந்தது. இந்தப் புயலால் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தது.
சென்னையிலும் பாதிப்பு கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில்
நிவர் புயலைத் தொடர்ந்து புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம்
எச்சரித்த நிலையில் அந்தப் புயலுக்கு 'புரெவி' புயல் எனப் பெயர்
வைக்கப்பட்டது.
தற்போது கன்னியாகுமரியில் இருந்து 1,040 கி.மீ
தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் 24 மணி
நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புரெவி
புயலானது டிசம்பர் 2 ஆம் தேதி மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை
அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.