கனடாவில் இந்தியா வம்சாவளியினர் மீது இனவெறி தாக்குதல்
By: Nagaraj Sat, 18 July 2020 4:21:11 PM
இனவெறி தாக்குதல்... இந்திய வம்சாவளியினர் மீது கனடாவில் இனவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வான்கூவர் நகரின் சம்மர்லேண்ட் பகுதியில் உள்ள ஒரு இந்திய வம்சாவளியினரின் வீடு, நள்ளிரவு நேரத்தில் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறது. அப்போது ரமேஷ் லேகி மற்றும் கிரண் லேகி தம்பதியர் மட்டுமே, வீட்டில் இருந்துள்ளனர்.
இரவு நேரம் என்பதால் அவர்கள் வெளியே வரவில்லை. விடிந்து பார்த்தபோது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருந்தன. இன்னொரு அதிர்ச்சியாக, வீட்டுச் சுவர்களில் கெட்ட வார்த்தைகள், இனவெறியைக் குறிக்கும் ஓவியங்கள் மற்றும் ஆபாச படங்கள் வரையப்பட்டிருந்தன.
இந்த சம்பவத்தை அறிந்த லேகி தம்பதியரின் மூன்று குழந்தைகளும்,
அதிகாலையிலேயே பெற்றோர் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து விட்டார்கள்.
சுவரிலிருந்த ஓவியங்களைப் பார்த்த அவர்கள், இது இனவெறி கொண்ட நபர்களின்
தாக்குதல் என்பதை உறுதி செய்து பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.
இந்த
பகுதியில் இனி வசிப்பதற்கே அச்சமாக இருக்கிறது என கூறியிருக்கிறார் லேகி
தம்பதியின் மகள் விஷாலி. வயதானவர்கள் மட்டும் இருக்கும்போது இப்படி ஒரு
அத்துமீறல் நிகழ்ந்திருக்கிறது என்றால், அவர்கள் மிகக் கொடுமையானவர்கள் என
கூறியிருக்கிறார் அவர்களது இளைய மகனான அபிஷேக்.
இந்த தாக்குதலை
அறிந்த சம்மர்லேண்ட் நகர மேயர் டோனி பூட், இது ஒரு குடும்பத்தின் மீதான
தாக்குதல் அல்ல எனவும், இன ரீதியாக குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்
எனவும் விமர்சித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த
மேயர், அவர்களுக்கு ஆறுதல் கூறி, நம்பிக்கை அளித்துள்ளார். இனவெறி
தாக்குதலுக்கு எதிராக கனடா மக்கள் பலரும் எதிர்ப்புக் குரல்
கொடுத்துள்ளனர்.