இன்று மீண்டும் பாதயாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி
By: Nagaraj Sun, 23 Oct 2022 3:11:29 PM
ஐதராபாத் : ராகுல் காந்தி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு ராய்ச்சூர் மாவட்ட பி.எச்.ஐ.எல். அலுவலகத்தில் இருந்து மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் செப்டம்பர் 7 தமிழகத்தின் கன்னியாகுமரியில் ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார்.
பாதயாத்திரை கேரளா சென்று 19 நாட்கள் நடந்தது. அதன் பிறகு ராகுல் காந்தியின் பாதயாத்திரை கடந்த மாதம் 30ம் தேதி கர்நாடகா வந்தது. அன்று சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.
பின்னர் மைசூர், மாண்டியா, தும்கூர், சித்ரதுர்கா, பல்லாரி ஆகிய இடங்களில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை 15 நாட்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஆந்திராவில் கடந்த 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை 3 நாட்கள் பாதயாத்திரை நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ராகுல் காந்தியின் பாதயாத்திரை மீண்டும்
கர்நாடகாவுக்கு வந்தது. அதாவது கர்நாடக எல்லையான ராய்ச்சூரில் நேற்று
பாதயாத்திரை நடத்தினார். கர்நாடகாவில் 17வது நாளான நேற்று, ராய்ச்சூர்
மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொண்டார்.
ராகுல் காந்தி இன்று
ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு ராய்ச்சூர் மாவட்ட பி.எச்.ஐ.எல்.
அலுவலகத்தில் இருந்து மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினார். ராகுல்
காந்தியின் பாதயாத்திரை காலை 10 மணிக்கு தெலுங்கானா சென்றடைகிறது.
தெலங்கானாவில் இன்று முதல் ராகுல் காந்தி பாதயாத்திரை செல்கிறார்.