தனியார் நிறுவன ஊழியர்கள் மின்சார ரெயிலில் பயணிக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி
By: Monisha Thu, 05 Nov 2020 08:59:02 AM
அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்களை மின்சார ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்களையும், மின்சார ரெயிலில் பயணிக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே தலைமை அலுவலக வர்த்தக துறையில் இருந்து சென்னை கோட்ட ரெயில்வே மேலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-
அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:-
- அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள்.
- அரசு மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய பொருட்களை கையாளும் மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.
- அனைத்து கல்வி நிலையங்களிலும் பணியாற்றுபவர்கள்.
- தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள்.
- சரக்கு மற்றும் பயணிகளுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள்.
- குழந்தை நலம், மூத்த குடிமக்கள் நலம், சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளில் ஈடுபடும் சமூக சேவை செய்யும் அமைப்புகள்.
- அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்.
- பார் கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் வக்கீல்கள் ஆகியோர் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அத்தியாவசிய பணி மற்றும் சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட எழுத்துப்பூர்வமான அங்கீகார கடிதத்தையும், அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையையும் பயணத்தின்போது காட்டவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.