தமிழகத்தில் இன்று (அக். 20) முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்
By: vaithegi Thu, 20 Oct 2022 4:46:38 PM
சென்னை: 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் ... நேற்று அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று (அக். 20) காலை அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைத்துள்ளது.
இதனை அடுத்து இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 22 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அக்டோபர் 23 ஆம் தேதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
இதையடுத்து அதன் பின் வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வருகிற அக். 24 ஆம் தேதி வலுபெறக்கூடும்.அதன் பின் 25 ஆம் தேதி மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகர கூடும். அதனால் இன்று (அக். 20) முதல் 24 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, மதுரை, நாமக்கல், கரூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, திண்டுக்கல், தஞ்சாவூர், தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், சேலம், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.