Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராஜபாளையத்தை சேர்ந்த மருத்துவர் கொரோனாவால் பலி; மக்கள் கண்ணீர் அஞ்சலி

ராஜபாளையத்தை சேர்ந்த மருத்துவர் கொரோனாவால் பலி; மக்கள் கண்ணீர் அஞ்சலி

By: Nagaraj Thu, 30 July 2020 11:38:25 AM

ராஜபாளையத்தை சேர்ந்த மருத்துவர் கொரோனாவால் பலி; மக்கள் கண்ணீர் அஞ்சலி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராஜபாளையத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் இறந்தார். அவரது பிரிவை தாங்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மருத்துவர் சாந்திலால் (67). மதுரையைச் சேர்ந்த இவர், ராஜபாளையத்தில் 40 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்தார். இவரது மனைவி சுந்தரி. கடந்த 2015-ல் மாரடைப்பால் இறந்தார். இவர்களது ஒரே மகள் சுப்ரியா, திருமணமாகி அமெரிக்காவில் வசிக்கிறார்.

இந்நிலையில், மருத்துவர் சாந்திலாலுக்கு கடந்த 10-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

rajapalayam,folk doctor,corona,martyred,tearful tribute ,
ராஜபாளையம், மக்கள் மருத்துவர், கொரோனா, பலியானார், கண்ணீர் அஞ்சலி

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் திருப்தி இல்லாததால் கடந்த 14-ம் தேதிமதுரையில் தனியார் மருத்துவமனையில் மருத்துவர் சாந்திலால் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமானதால், மீண்டும் கடந்த 16-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். இதையடுத்து மதுரையிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மருத்துவர் சாந்திலால் சமூக சேவையில் அதிகம் ஈடுபடுத்திக் கொண்டவர். அதோடு, ஏழை, எளியோருக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்ததால் மக்களின் பாசத்துக்குரியவராக திகழ்ந்தார். அதனால் அவரை 'மக்களின் மருத்துவர்' என்றே அழைத்தனர். கலை இலக்கியக் கூட்டங்களுக்கு தனது மருத்துவமனை வளாகத்திலேயே இடமும் அளித்தார்.

ஏழைகளுக்கு மனிதாபிமான முறையில் சிகிச்சை அளித்தவர். தன்னலமற்ற சேவையால் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த சாந்திலால் மறைவுக்கு ராஜபாளையம் சுற்று வட்டார பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags :
|