லடாக் எல்லையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்று ராஜ்நாத் சிங் ஆய்வு செய்கிறார்.
By: Karunakaran Fri, 17 July 2020 11:00:59 AM
லடாக் எல்லையில் கடந்த மாதம் இந்திய-சீனா வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து எல்லையில் போர் மூளும் சூழல் நிலவியது. பதற்றத்தைத் தணிக்க இருநாடுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தின.
இதனால் இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக வாபஸ் பெற்று வருகின்றன. இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று லடாக் வந்தார். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானேவும் அங்கு வருகை தந்துள்ளனர்.
லே விமான நிலையத்தில் இறங்கிய ராஜ்நாத் சிங், பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே ஆகியோருக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். அதன்பின், இன்று லடாக் எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆய்வு செய்ய உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் நாளை ஆய்வு செய்கிறார். அதற்குமுன் ராணுவ வீரர்களை சந்தித்து பேச உள்ளார். பிரதமர் மோடி லடாக் எல்லைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட 2 வாரங்களுக்குப்பின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.