7-வது நாளாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
By: vaithegi Fri, 28 July 2023 2:47:02 PM
இந்தியா: மணிப்பூர் கொடுமை பற்றி பிரதமர் விளக்கம் அளிக்க வலியுறுத்தியும், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தியும் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தொடர்ந்து முழக்கமிட்டு கொண்டு வருகின்றன. எனவே இதன் காரணமாக கடந்த 6 நாட்களாக நாடாளுமன்ற அவைகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பல போராட்டங்களை நடத்தியும் பிரதமர் மணிப்பூர் விவகாரம் குறித்து பேச முன்வரவில்லை. ஆனால் அதேநேரம் இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மத்திய அரசு, ஒருபக்கம் முழக்கங்களுக்கு மத்தியில் விவாதம் இன்றி மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றி கொண்டு வருகிறது.
இந்நிலையில் 7-வது நாளாக இன்று நாடாளுமன்றம் கூடியதும் எதிர்கட்சிகள் வழக்கம்போல் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி டெரிக் ஓ பிரையன் ஆவேசமாக பேசினார்.
இதையடுத்து அவரது செயலுக்கு கண்டனம் தெரிவித்த அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர், மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். நாளை மற்றும் நாளை மறுநாள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் திங்கள் கிழமை காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடும் என்று அவர் கூறினார்.