மீண்டும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
By: vaithegi Wed, 09 Aug 2023 12:19:36 PM
இந்தியா: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை தொடங்கிய உடனே எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மணிப்பூர் விவகாரம் பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கு இடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு தொடர் அமளியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இதனால், இரு அவைகளும் சரிவர நடைபெறாமல் முடங்கியுள்ளது.
மேலும், நாடாளுமன்ற விதி 267-ன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர். மேற்கண்ட கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்படாததால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். எனவே இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.
இதன் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் விவாதம் தொடங்குகிறது. இதையடுத்து இந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசுவார் என தெரிவிக்கபட்டு உள்ளது.மேலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸின் பேச்சாளர்களாக ராகுல் காந்தி, ரேவந்த் ரெட்டி, ஹெபி ஈடன் ஆகியோர் பேசவுள்ளனர்.