மகாராஷ்டிரா 20வது ஆளுனராக பதவியேற்றார் ரமேஷ் பயஸ்
By: Nagaraj Mon, 20 Feb 2023 10:12:14 AM
மும்பை: மகாராஷ்டிராவின் 20வது ஆளுநராக ரமேஷ் பயஸ் பதவியேற்றார். மராட்டிய கவர்னராக இருந்த பகத்சிங் கோஷ்யாரி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து புதிய கவர்னராக ஜார்கண்ட் மாநில கவர்னராக இருந்த ரமேஷ் பயசை கடந்த வாரம் நியமித்தார். தொடர்ந்து கவர்னர் பதவி ஏற்பதற்காக ரமேஷ் பயஸ் மும்பை வந்தார். அவரை விமான நிலையத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வரவேற்றார்.
தொடர்ந்து புதிய கவர்னர் பதவியேற்பு விழா மும்பை ராஜ்பவன் மையத்தில் நடந்தது. விழாவில் மகாராஷ்டிராவின் 20வது ஆளுநராக ரமேஷ் பயஸ் பதவியேற்றார். அவருக்கு மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ரமேஷ் பயஸ் மராத்தியில் ஆளுநராக பதவி ஏற்றார். புதிய கவர்னர் ரமேஷ் பயஸை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பூங்கொத்து கொடுத்து பாராட்டினார்.
கவர்னரின் மனைவி ரமாபாய் பயஸ், மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மங்கள் பிரதாப் லோதா, சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேகர், ஓய்வு பெற்ற லோக்ஆயுக்தா நீதிபதி வித்யாசாகர் கனடே உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். மகாராஷ்டிராவின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ரமேஷ் பயஸ், 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி அப்போதைய மத்தியப் பிரதேச மாநிலமான ராய்பூரில் பிறந்தார்.
1978-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். ராய்பூர் தொகுதியில் 7 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார். வாஜ்பாய் ஆட்சியில் மத்திய இணை அமைச்சராக பதவி வகித்தார். 2019ல் திரிபுரா கவர்னராக நியமிக்கப்பட்டார்.அதன் பின், 2021 முதல் 2023 வரை ஜார்கண்ட் கவர்னராக இருந்த அவர், தற்போது மகாராஷ்டிரா கவர்னராக உள்ளார்.