இலங்கையின் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம்
By: vaithegi Wed, 13 July 2022 2:55:12 PM
கொழும்பு : இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடினர். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். மேலும் அவர் நாட்டை விட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால், கோத்தபய இலங்கையில்தான் இருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.
இதற்கு இடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விமானப்படை விமானம் மூலம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது குடும்பத்தினருடன் மாலத்தீவு தப்பிச்சென்றுள்ளார்.
இதையடுத்து ராஜபக்ச ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்குப் பறந்ததைத் தொடர்ந்து அதிகரித்து வரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த, தலைநகர் கொழும்பை மேற்கு மாகாணம் முழுவதும் காலவரையற்ற ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தற்காலிக அதிபராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
கோத்தபய ராஜபக்ச, மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, நாட்டில் அவருக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் அவர் பதவி ஏற்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு வருகின்றன.