- வீடு›
- செய்திகள்›
- கற்பழிப்பு வழக்குகளில் 2 மாதங்களில் விசாரணை முடிக்க வேண்டும் - மத்திய அரசு அதிரடி உத்தரவு
கற்பழிப்பு வழக்குகளில் 2 மாதங்களில் விசாரணை முடிக்க வேண்டும் - மத்திய அரசு அதிரடி உத்தரவு
By: Karunakaran Sun, 11 Oct 2020 09:13:01 AM
உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராசில் தாழ்த்தப்பட்ட இன இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு நீதி கேட்டு பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளது.
குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி, வாரண்டு இன்றி கைது செய்யப்படும் குற்றங்களில் கட்டாயம் வழக்கு பதிவு செய்தல் வேண்டும். போலீஸ் துறை விதிகளை பின்பற்ற தவறினால், நீதி வழங்குவதற்கு ஏற்றதாக இராது. ஒரு போலீஸ் நிலையத்தின் அதிகார எல்லைக்கு வெளியே பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு உள்ளிட்ட குற்றம் நடந்து, அதுபற்றிய தகவல் கிடைத்தால் அது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் வழி உள்ளது.
சட்டத்தில் கடுமையான விதிகள் இருந்தாலும்கூட, போலீஸ் துறை பின்பற்ற தவறினால், நாட்டில் குற்றவியல் வழக்குகளில் நீதி வழங்குவது ஏற்றதாக இருக்காது. அப்படிப் பட்ட சூழல் தெரியவந்தால், அதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு பொறுப்பான குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கற்பழிப்பு வழக்குகளில் 2 மாதங்களில் போலீஸ் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
எழுத்தாலோ, வாய்மொழியாலோ வாக்குமூலம் அளித்த நபர் இறந்து விட்டால், அவரது வாக்குமூலம் உண்மையாக கருதப்படும் என்று இந்திய சாட்சிய சட்டம், 1872 கூறுகிறது. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சான்று சேகரிப்பு கருவிகளை (எஸ்.ஏ.இ.சி.) பயன்படுத்துவது அவசியம். பாலியல் குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களை அடையாளம் காணவும், கண்காணிக்கவும் தேசிய தரவுதளத்தை பயன்படுத்த வேண்டும். பெண்கள், பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கையாள்வதற்கான சட்ட விதிகளை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.