வீடு தேடி வரும் ரேஷன் கார்டு ... அரசு திட்டமிடல்
By: vaithegi Fri, 10 Mar 2023 2:25:19 PM
சென்னை: தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக புதிய ரேஷன் கார்டு பெற ஏராளமானோர் முயற்சித்து கொண்டு வருகின்றனர். நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக உணவு வழங்கல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து தற்போது புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மிகவும் எளிதாகி விட்டது. இதற்கு முன்பெல்லாம் தாலுகா அலுவலகம் சென்று புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நிலை இருந்தது.
ஆனால் தற்போது அதற்கு அவசியமே இல்லை. வீட்டில் இருந்தபடி www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமல்ல ரேஷன் கார்டில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும் தேவைகேற்ப ஆன்லைன் வாயிலாகவே மாற்றிக்கொள்ளலாம்.
இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு மற்றும் விவரங்கள் சேர்ப்பு மற்றும் நீக்கம் தொடர்பாக விண்ணப்பித்தவர்களுக்கு புதிய கார்டை அஞ்சல் துறை வாயிலாக நேரடியாக விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே அனுப்பும் திட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக உணவு வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது. மாற்று கார்டு பெறுபவர்களுக்கு கட்டணமாக ரூ. 20 மற்றும் அஞ்சல் கட்டணமாக ரூ. 25 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.