விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்; மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல்
By: Nagaraj Sun, 29 Nov 2020 1:07:23 PM
உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த தயார்... டெல்லியில் நெடுஞ்சாலைகளை வழிமறித்து டிராக்டர்கள், வாகனங்களுடன் திரண்டுள்ள விவசாயிகள் போராட்டத்தை நடத்த ஒதுக்கப்பட்ட மைதானத்தில் இடம் மாறினால் டிசம்பர் 3ம் தேதிக்கு முன்பாகவே, உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
பஞ்சாபில் இருந்து டெல்லி நோக்கி பேரணியாக திரண்டு வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இரண்டாவது இரவை கடும் குளிரில் வெட்டவெளியில் கழித்தனர். மத்திய அரசின் இரண்டு விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லிக்கு அணிவகுத்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு டிசம்பர் 3ம் தேதி நாள் குறித்துள்ளது.
ஆனால் விவசாயிகளிடம் உடனடியாகப் பேச்சு நடத்தவும் தயார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். விவசாயிகள் நெடுஞ்சாலையில் டிராக்டர், வாகனங்களை நிறுத்தி மறியல் செய்யாமல் தங்களுக்கு போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடத்திற்கு செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
விவசாயிகள் சட்டம் ஒழுங்கை மீறாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அமித் ஷா வலியுறுத்தினார்.
ஹரியானா
விவசாயிகள் யாரும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறிய அம்மாநில
முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹரியானாவைச்
சேர்ந்த 1500 விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டனர்.
இன்று டெல்லியில்
நடைபெறும் போராட்டத்தில் அவர்களும் பங்கேற்கின்றனர். முன்னதாக ஹரியானாவை
கடந்து வந்த விவசாயிகள் கல்வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் போலீசார்
தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர்.
தண்ணீர்
பாய்ச்சிய போலீசாரின் வாகனம் மீது ஏறிய இளைஞர் ஒருவர் காவலரிடமிருந்து
தண்ணீர் பாய்ச்சும் குழாயை பறிமுதல் செய்த காட்சி வைரலானது.