Advertisement

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - விவசாயிகள்

By: Karunakaran Sun, 13 Dec 2020 11:41:11 AM

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - விவசாயிகள்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 17-வது நாளை எட்டியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், போராட்டத்துக்கு தீர்வு காணும் வகையில் சில யோசனைகளை விவசாயிகளுக்கு அரசு அனுப்பியது.

குறிப்பாக குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த எழுத்துப்பூர்வ உறுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. ஆனால் 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்பதிலேயே மிகவும் உறுதியாக இருக்கும் விவசாயிகள், இந்த சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே விவசாயிகளுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிகிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் நிபந்தனைகளை விதித்து உள்ளனர்.

negotiate,central government,farmers,delhi ,பேச்சுவார்த்தை, மத்திய அரசு, விவசாயிகள், டெல்ஹி

இதுகுறித்து விவசாய அமைப்பு தலைவர்களில் ஒருவரான கன்வல்பிரீத் சிங் பன்னு, நேற்று சிங்கு எல்லையில் அளித்த பேட்டியில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு விரும்பினால், நாங்கள் தயார். ஆனால் 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்ற எங்களது கோரிக்கை இன்னும் அப்படியே இருக்கிறது. அது குறித்துதான் முதலில் பேசவேண்டும். அதன்பிறகே எங்களின் பிற கோரிக்கைகள் குறித்து பேசுவோம். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி விவசாய அமைப்புகளின் தலைவர்கள் 14-ந்தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலை மற்றும் யமுனா எக்ஸ்பிரஸ் சாலை போன்றவற்றை முடக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் டெல்லியின் எல்லைப்பகுதிகளில் நேற்று முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சாலைகளில் காங்கிரீட் கட்டைகள், முள்வேலிகள் போன்றவற்றால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. விவசாயிகளின் போராட்டத்தால் ஏற்கனவே பல சாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், திறந்திருக்கும் சாலைகளிலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags :