Advertisement

விலைவாசியை குறைக்க நியாயமான நடவடிக்கை தேவை

By: Nagaraj Thu, 04 Aug 2022 10:06:18 AM

விலைவாசியை குறைக்க நியாயமான நடவடிக்கை தேவை

சென்னை: நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும்... ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு மற்றவர்கள் மீது பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளாமல், விலைவாசியைக் குறைக்க நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 75வது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் இல்லங்கள் மற்றும் கடைகளில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி இருக்கின்றன. அதை ஏற்று வணிக கடைகளிலும் இல்லங்களிலும் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்படும் எனக் கூறினார்.

மேலும், இளைய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு எனும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. அதை மனதார வரவேற்பதாகக் கூறிய அவர், 47வது ஜிஎஸ்டி கூட்டத்தில், பால், தயிர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியை 5 சதவீதம் ஏற்றப்பட்டுள்ளது. இதைக் கண்டித்துப் பல போராட்டங்களை நடத்தி வருவதாகக் கூறினார்.

மக்கள் தலையில் விலைவாசி உயர்வு விழக்கூடாது என்றால் ஜிஎஸ்டி வரி உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் விலைவாசி உயர்வுக்கு வியாபாரிகளைக் குறை செல்வதை ஏற்க முடியாது, இதைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த அவர், விலைவாசி உயர்வுக்கு வணிகர்களைக் குற்றம் சொல்வதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தவிர்க்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5 சதவீத வரி உயர்வை நடைமுறைப்படுத்தியிருப்பதைத் திரும்பப் பெறவில்லை என்றால், மதுரையில் நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தன்று கடைகள் அடைக்கப்பட்டும், மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.

மின் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில், சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு மின் துறையில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது போல் சிறு குறு துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள வியாபாரிகளுக்கும் சலுகைகள் அளிக்க வேண்டும் என எனத் தெரிவித்த அவர், கடுமையான விலைவாசி உயர்வை ஏற்படுத்தக் கூடிய மின்கட்டண உயர்வைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்துவதாகக் கூறினார். மேலும், சந்தைகளுக்குச் செல்லக்கூடிய பொருட்களுக்கு மட்டுமே அரசு செஸ் வரி வசூலிக்க வேண்டும் எனவும் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி செஸ் வரி வசூலிக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.

rent,merchants,action,merchants associations,convention ,வாடகை கட்டணம், வியாபாரிகள், நடவடிக்கை, வணிகர் சங்கங்கள், பேரமைப்பு

தொடர்ந்து பேசிய அவர், இது தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வலியுறுத்த இருப்பதாகக் கூறிய அவர், மற்றவர்கள் மீது பழி போட்டுவிட்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தப்பித்துக் கொள்ளக் கூடாது, விலைவாசி உயர்வைக் குறைக்க நியாயமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் போடப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி உயர்வை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களைத் தமிழ்நாடு அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பணம் கிடைக்கிறது என்ற காரணத்தால் தேவையற்ற விளம்பரங்களில் நடிகர்களும் விளையாட்டு வீரர்களும் நடித்தால் அது நாட்டுக்குச் செய்யும் துரோகம் எனக் குற்றம் சாட்டினார். மேலும், சோதனை செய்து பயன்படுத்தும் பொருட்கள் மட்டுமே அவர்கள் விளம்பரம் செய்ய வேண்டும்.


மேலும், சாலையோர வியாபாரிகளிடம் முறையான வாடகை கட்டணம் வசூலித்தால், அதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். லஞ்சம், மிரட்டல், ரவுடிசம் முழுமையாகக் குறைக்கப்படும் எனக் கூறிய அவர், சாலையோர வியாபாரிகளை மிரட்டி யாராவது லஞ்சம் பெறுவதாக தங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயாராக இருப்பதாகக் கூறினார்.

Tags :
|
|