கேரளாவில் இன்று 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
By: vaithegi Wed, 03 Aug 2022 07:43:33 AM
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்து பெய்கிறது. இதனால், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதுபோல் நாளை எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் மட்டும் 204.5 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 2 நாட்களில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர். இதில் நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்தனர்.
இதை அடுத்து இந்நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பம்பை, நெய்யார், மணிமலா, மணிமலா (கல்லுப்பாறை), கரமனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த பலத்த மழையை தொடர்ந்து கேரளாவில் 49 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது. இவற்றில் 757 பேர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு உள்ளனர். கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி கோட்டயம், ஆலப்புழை, பத்தனம்திட்டை ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை விடப்பட்டு உள்ளது என கூறப்பட்டுள்ளது.