மகாராஷ்டிராவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
By: vaithegi Tue, 12 July 2022 2:38:45 PM
மகாராஷ்டிரா: நாடு முழுவதும் பருவமழை மிக தீவிரமடைந்து வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அம்மாநிலத்தில் உள்ள கோலாப்பூர், பால்கர், நாசிக், புனே மற்றும் ரத்னகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மும்பைக்கு ஆரஞ்சு அலர்ட்டையும் விடுத்துள்ளது. மேலும் ஜூலை 11 முதல் 14 வரைக்கும் மத்திய மகாராஷ்டிராவின் மலைத்தொடர் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஜூன் 1 முதல் ஜூலை 10 வரை கனமழை பெய்துள்ளது. அந்த வகையில் நாசிக் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 11) பெய்த கனமழையால் பல ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்தது மற்றும் பல கோயில்கள் நீரில் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், கடந்த மாதம் துவங்கிய பருவமழைக்கு மத்தியில் மும்பை மாநகரத்தில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என அறிக்கைகள் தகவல் அளித்துள்ளது.