கர்நாடகாவில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் குறைப்பு
By: Nagaraj Tue, 23 June 2020 11:10:20 PM
சிகிச்சை கட்டணம் குறைப்பு... கர்நாடகாவில் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை குறைத்து மாநில அரசு உத்தரவிட்டது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் பாதிப்புகளை அதிகரித்து வருகிறது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அத்துடன் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களின் சிகிச்சை கட்டணத்தை குறைத்து மாநில அரசு உத்தரவிட்டது.
அதன்படி, பொது சுகாதார வசதிகளால் குறிப்பிடப்படும் நோயாளிகளுக்கு ரூ.5200 முதல் ரூ,10,000 வரையும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ரூ,10,000 முதல் ரூ. 25,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான விகிதங்களை நிர்ணயிப்பதற்கான முன்மொழிவை சமர்ப்பிக்க அமைக்கப்பட்ட சுவர்ணா ஆரோக்ய சுரக்ஷா அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாநில தலைமை செயலாளர் விஜய் பாஸ்கர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, பொது வார்டுக்கு, 5200 ரூபாய் , உயர் சார்பு பிரிவுக்கு (HDU)
ரூ.7000 , வென்டிலேட்டர் இல்லாமல் தனிமைப்படுத்தலில் இருந்தால் ரூ.8500
மற்றும் வென்டிலேட்டருடன் இருந்தால் ரூ,10,000 வரை வசூலிக்கப்படும். மேலும்
அதிகாரிகளால் குறிப்பிடாமல் நோயாளிகள் நேரடியாக மருத்துவமனையில் சேர்வது,
பணம் செலுத்துவது மற்றும் காப்பீடு அல்லாத பிரிவின் கீழ் வருவது
போன்றவற்றில், பொது வார்டுக்கு ஒரு நாளைக்கு ரூ.10,000 எனவும், எச்டியு
சேர்க்கைக்கு தினசரி கட்டணம் ரூ.12,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டது.
அனைத்து
தொகுப்புகளிலும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ)
அடங்கியிருக்கும். மற்ற நுகர்பொருட்களுக்கான கட்டணங்கள் சேர்க்கப்படும்.
இருப்பினும்
சிலருக்கு ( நிர்வாகிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட) இந்த
விதிகள் பொருந்தாது என அறிவிக்கப்பட்டது.தனியார் மருத்துவமனைகளில், 50
சதவீத படுக்கைகள் பொது சுகாதார அதிகாரிகளால் குறிப்பிடப்படும்
நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒதுக்கப்படும். இவற்றில் ஐசியு, எச்டியு
உள்ளிட்ட தீவிர மற்றும் சிறப்பு பிரிவு சிகிச்சைகளும் அடங்கும்.
மீதமுள்ள
படுக்கைகள் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு தனிப்பட்ட முறையில்
சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம். எதிர்பாராத சிக்கல்கள் தொடர்பாக, ஆயுஷ்மான்
பாரத் மற்றும் ஆரோக்ய கர்நாடகாவின் கீழ் அறுவை சிகிச்சைகள், கொமொர்பிட்
நிலைமைகள் மற்றும் கர்ப்ப கூடுதல் தொகுப்புகள் பயன்படுத்தப்படும். மேலும்
அனைத்து வித நோயாளிகளுக்கும் வழப்படும் சிகிச்சையில் எந்தவித சமரசமும்
இருக்ககூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.