கொரோனா நோயாளி இறந்ததால் தனியார் மருத்துவமனையை சேதப்படுத்திய உறவினர்கள்
By: Nagaraj Wed, 19 Aug 2020 09:31:08 AM
கொரோனா நோயாளி இறந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை சேதப்படுத்தினர்.
ராமநாதபுரம் அருகே சோகையன்தோப்பை சேர்ந்த 65 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 8ம் தேதி ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் மலையரசு நடத்தும் கேணிக்கரை 'வேல்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று அவர் பலியானதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை வார்டில் உள்ள டி.வி., மற்றும் சில உபகரணங்களை உடைத்தனர். தகவலறிந்து ராமநாதபுரம் டி.எஸ்.பி., வெள்ளத்துரை, கேணிக்கரை இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ராமநாதபுரத்தில் இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே கொரோனா சிகிச்சைக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில், வேல் மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காமல், வெண்டிலேட்டர் பயன்படுத்தாமல் சிகிச்சை கட்டணமாக ரூ.7.50 லட்சம் வசூலித்ததாக இறந்தவரின் மகன் கோதண்டராமன் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார்.
முன்னதாக டாக்டர் மலையரசை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
இதுகுறித்து டாக்டர் மலையரசு கூறுகையில், 'இந்த நோயாளி இதற்கு முன் இரண்டு
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். மற்றொரு டாக்டர் பரிந்துரையில் இங்கு
அனுமதிக்கப்பட்டார். அவரை பொறுத்தமட்டில் ஆரம்பம் முதலே மதுரைக்கு அழைத்து
செல்ல கூறிவிட்டோம்.
தொடர்ந்து பலமுறை கூறியும் அவர்கள்
கேட்கவில்லை. உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனாவை பொறுத்தவரை எப்போதும்
எதுவும் நடக்கலாம். மருத்துவமனையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது
மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க புகார்
அளித்துள்ளேன்,' என்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.