ஊரடங்கில் தளர்வுகள்... வாழைத்தார்களின் விலை உயரே... உயரே செல்கிறது
By: Nagaraj Sat, 23 May 2020 1:42:53 PM
ஊரடங்கு காலத்தில் மிகவும் விலை குறைந்து விற்கப்பட்ட வாழைத்தார் தற்போது தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே செல்கிறது என்ற வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனைமலையில் நடந்த வாழைத்தார் ஏலத்தில், வரத்தும், விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அருகே, வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை வாழைத்தார் ஏலம் நடக்கிறது. இதில், ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், கோட்டூர் பகுதி விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், அதிக அளவிலான கடைகள் செயல்படத் துவங்கி உள்ளன. விவசாயிகளும் சிரமமின்றி வாழைத்தாரை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். பேக்கரிகள் திறக்கப்பட்டதால், 'சிப்ஸ்' தயாரிக்க தேவைப்படும் நேந்திரன் வாழைப்பழத்தின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், நேந்திரன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கதளி ரக வாழைத்தார், 400 ரூபாய்; செவ்வாழை, 1,000; பூவன், 450; நேந்திரன், 400; கற்பூரவல்லி, 600 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், அனைத்து ரக வாழைத்தாரும், 60 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு தெரிவித்தனர். இந்த விலை இன்னும் உயரும் என்றும் தெரிவித்துள்ளனர்.