கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளை கடுமையாக்க வேண்டும் - மருத்துவ குழு பரிந்துரை
By: Monisha Mon, 15 June 2020 3:19:18 PM
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 31 ஆயிரத்து 896 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். இதையடுத்து மருத்துவமனைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் மருத்துவ நிபுணர் குழு சார்பில் குகானந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பு தொடர்பாக முதலமைச்சரிடம் 5-வது முறையாக ஆலோசனை நடத்தியுள்ளோம். கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு குறையும் என கூறியிருந்தோம். அதுபோல் நடக்க உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. உச்சத்தை அடைந்துள்ள கொரோனா பாதிப்பு குறைய தொடங்கும்.
பரிசோதனைகள் அதிகமாக செய்ய செய்ய பாதிப்பை கண்டறிந்து உயிரிழப்பை தடுக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்ய கூறியுள்ளோம். சென்னையில் ஒவ்வொரு வார்டுகளிலும் தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட ஆக்சிஜன் சிலிண்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளை கடுமையாக்க பரிந்துரைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.