இந்தியாவின் கொரோனா பாதிப்பு குறித்து.... மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியீடு
By: vaithegi Wed, 15 June 2022 12:14:28 PM
இந்தியா: கடந்த 2 வருடங்களாக கொரோனா ,தொற்று ஒன்று உலக மக்கள் அனைவரையுமே உலுக்கி வந்தது. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும், இவை உருமாற்றம் அடைந்து மீண்டும் மீண்டும் பரவி வருகிறது.
கொரோனாவின் பிறப்பிடமான வுகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா, அதிக பேரழிவை ஏற்படுத்தியது. இருப்பினும் ஜீரோ கோவிட் பாலிசியை சீன அரசு கடைபிடித்து வந்ததால் அந்த தொற்றின் வேகம் கட்டுக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீன நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவியது.
இதனால் சீன அரசு மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளை கையில் எடுக்க தொடக்கியுள்ளது. இதன் பலனாக ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து சீன அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தளர்வு அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த தொற்று இந்தியாவிலும் மறுபடியும் தலைதூக்கி உள்ளது. அந்த வகையில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதேபோல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையின்படி, புதிதாக 8,822 பேர் பாதித்துள்ளனர்.இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,45,517 ஆக உயர்ந்தது.
புதிதாக 15 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,792 ஆக உயர்ந்தது.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 5,718 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,77,088ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.66% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது. மேலும் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.12% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 53,637 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 1,95,50,87,271 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13,58,607 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.