கோடிக்கணக்கில் பணம் ஏற்றிச் சென்ற வாகனம் பழுது... போலீசார் பாதுகாப்பிற்கு குவிப்பு
By: Nagaraj Thu, 18 May 2023 10:26:43 PM
சென்னை: கோடிக்கணக்கான பணத்துடன் பழுதான வாகனம்... சென்னை ரிசர்வ் வங்கியிலிருந்து விழுப்புரத்துக்கு 535 கோடி ரூபாய் பணத்துடன் சென்ற வாகனங்களில் ஒன்று தாம்பரம் அருகே பழுதான நிலையில், நீண்ட நேரம் போராடியும் பழுதை சரி செய்ய முடியாததால் மீண்டும் ரிசர்வ் வங்கிக்கே கொண்டு செல்லப்பட்டது.
இரண்டு கண்ட்டெய்னர் லாரிகளில் இந்த பணம் விழுப்புரம் பகுதிகளிலுள்ள வங்கிகளுக்கென கொண்டு செல்லப்பட்டது. அவற்றில் ஒரு லாரி தாம்பரம் அருகே வந்தபோது, திடீர் பழுது ஏற்பட்டு வழியில் நின்றது.
பாதுகாப்பு கருதி அருகிலிருந்த அரசு சித்த மருத்துவமனை வளாகத்துக்கு இரண்டு லாரிகளும் கொண்டு செல்லப்பட்டன. உடனடியாக தாம்பரம் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
பல மணி நேரம் போராடியும் பழுதை சரி செய்ய முடியாததால், மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, பழுதான லாரி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் ரிசர்வ் வங்கிக்கே கொண்டு செல்லப்பட்டது. உடன் வந்த மற்றொரு லாரியும் ரிசர்வ் வங்கிக்கே திருப்பி அனுப்பப்பட்டது.