கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரிப்பு என்று தகவல்
By: Nagaraj Fri, 17 Feb 2023 10:16:52 PM
கோவை: இந்திய இரதய அறுவை சிகிச்சை சங்கத்தின் 69-வது வருடாந்திர கருத்தரங்கம் கோவையில் நடந்து வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
இதனை அடுத்து விழாவில் உரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: 2008-க்கு பிறகு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இருதய மாற்று அறுவை சிகிச்சை உட்பட பல மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே முதலிடத்தில் உள்ளது.
மேலும் புற்றுநோய் சிகிச்சையில் மிக சிறப்பாக பங்களித்து வரும் ஜப்பான் சென்று, அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் உட்பட உயர் அதிகாரிகளுடன் உதவியுடன் நேரடியாக அந்த சிகிச்சையை முறைகளையும் பார்த்து வந்துள்ளோம்.
அந்த நாட்டில் செயல்படுத்தி வரும் Health walking என்ற திட்டம் மாரடைப்பை குறைக்க அவசியம் என்ற அடிப்படையில், தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் Health walking திட்டத்தை கொண்டு வர முதல்வரிடம் கோரிக்கை வைத்து செயல்படுத்த உள்ளோம்.
கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரித்து வருவதால் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமென இதய சிகிச்சை நிபுணர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இளைஞர்களிடையே உடற்பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாள்தோறும் நான் ஓடி வருகிறேன் என அவர் கூறினார்.