ஆழ்கடல் பகுதியில் சிக்கி உணவின்றி தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு
By: Nagaraj Wed, 02 Aug 2023 7:46:00 PM
செங்கல்பட்டு: மீனவர்கள் மீட்பு... ஆழ்கடல் பகுதியில் உணவின்றி தத்தளித்த 6 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கோவிந்த் (வயது 55), பவுன்ராஜ் (34), பாலசுப்ரமணி (47), சிலம்பரசன் (34), இளங்கோ (38), வீரவேல் (35) ஆகிய 6 பேரும் கடந்த 30-ந் தேதி 2 மணி அளவில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று புதுப்பட்டினம் கடலில் ஆழ்கடலில் மீன்பிடித்தனர்.
மீ்ண்டும் கரைக்கு திரும்ப மோட்டார் என்ஜினை இயக்கியபோது பழுது ஏற்பட்டு நின்றது. கரைப்பகுதியில் உள்ள சக மீனவர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்க முயன்றபோது, செல்போன் சிக்னலும் இயங்காததால் நொந்து போய் உணவின்றி மயக்க நிலைக்கு சென்றுவிட்டனர்.
இதற்கிடையில் நேற்று அதிகாலை கரை திரும்புவதாக இருந்த மீனவர்கள் கரை திரும்பாததால் சந்தேகமடைந்த 6 மீனவர்களின் உறவினர்களும், கடலோர காவல் படைக்கும், மீன்வளத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். பிறகு போலீசாருடன் இணைந்து, கடலோர காவல் படையினர் குறிப்பிட்ட தூரத்தில் கரைப்பகுதியில் 6 மீனவர்களையும் தேடி வந்தனர்.
பிறகு புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம், சதுரங்கப்பட்டினம் ஆகிய 3 கிராம மீனவர்கள் 5 படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று தேடியபோது, 6 மீனவர்களும் உணவின்றி என்ஜின் பழுதடைந்த படகில் மயக்க நிலையில் நீலாங்கரை கடல்பகுதிகளில் இருந்ததை கண்டுபிடித்து அவர்களை மீட்டனர்.