அக்கரப்பத்தனை குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்
By: Nagaraj Tue, 10 Jan 2023 09:13:44 AM
கொழும்பு: சிறுத்தைகளின் நடமாட்டம்... அக்கரப்பத்தனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை நியூ கொலனி பகுதியில் மக்கள் வாழும் பகுதியில் கடந்த சில காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் குறித்த பிரதேச மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். அக்கரப்பத்தனை நியூ கொலனி பகுதியில் கடந்த காலங்களில் சிறுத்தைகள் இரவு வேளைகளில் மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வருகை தந்து கால் நடைகளை இழுத்து செல்வதனை நாம் கடந்த காலங்களில் வெளிப்படுத்தியிருந்தோம்.
எனினும் இது குறித்து வனபாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த 07 ஆம் திகதி அன்று இரவு சிறுத்தை ஒன்று இப்பகுதியில் வசிக்கும் நாகராஜ் என்பவரின் வீட்டுக்கு வந்து செல்லும் காட்சி, அவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது.
இந் நிலையில் மக்கள் நடமாடும் பகுதியில் இரவு வேளையில் வெளிச்சத்திலும், சிறுத்தைகள் வருகை தந்து கால் நடைகளை கொண்டு செல்வதனால் இப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொது மக்கள் உயிர்களுக்கும் சிறுத்தைகளின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள் அக்கரப்பத்தனை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அப்பிரதேச மக்கள் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.