மகாசங்கத்தினர் வேண்டுகோள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம்
By: Nagaraj Sat, 22 Aug 2020 5:00:26 PM
ஜனாதிபதி தீர்மானம்... மகாசங்கத்தினரின் வேண்டுகோளின் பேரில் இலங்கை பௌத்த, பாலி பல்கலைக்கழகத்தையும் புத்த ஷிராவக பிக்கு பல்கலைக்கழகத்தையும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இரண்டு பல்கலைக்கழகங்களையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார். இப்பல்கலைக்கழகங்களின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சரின் கீழ் முறையாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஜனாதிபதி பௌத்த ஆலோசனைக் குழுவின் ஐந்தாவது கூட்டத்தொடரின்போது ஜனாதிபதியினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
ஜனாதிபதி ஆலோசனை சபையின் 4வது கூட்டத்தொடரில் மகாசங்கத்தினர் முன்வைத்த
முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள
செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்ற நிலைமைகளை அடுத்த கூட்டத்தில்
சமர்ப்பிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சு
கட்டமைப்பை ஏற்படுத்தும்போது பௌத்த ஆலோசனை சபையின் வழிகாட்டல்களை
அடிப்டையாக கொண்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரச கொள்கை வகுப்பின்போது
தொடர்ந்தும் மகாசங்கத்தினரின் வழிகாட்டலை தான் எதிர்பார்ப்பதாகவும்
தெரிவித்தார். அறநெறிப் பாடசாலைகள், பிக்குகளின் கல்வி, பிரிவெனாக்கள்
மற்றும் பெளத்த பல்கலைக்கழகங்களின் முன்னேற்றத்திற்காக இராஜாங்க அமைச்சு
ஒன்றை நேரடிக் கண்காணிப்புக்காக நியமித்திருப்பதாகவும் ஜனாதிபதி
சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் தற்போதைய பிரிவெனா கல்வி முறையில்
உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அறநெறிப் பாடசாலைகளின் கல்வி
நடவடிக்கைகளை முறையான நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக சிறந்த நிலைக்கு
மாற்றுவதற்கும் ஜனாதிபதி மேற்கெண்டு வரும் முயற்சிகளை மகாசங்கத்தினர்
பாராட்டினர். இம்முறை நாடாளுமன்றத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட
பதவிகளுக்கு தெரிவுகளை மேற்கொள்ளும் போது பின்பற்றப்பட்ட நடைமுறை
நாட்டுக்கு முன்னுதாரணமானதாகும் என மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர்
சங்கைக்குரிய நியங்கொட விஜத்த சிறி தேரர் குறிப்பிட்டார்.
கடந்த
அரசாங்க காலத்தில் இப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட முறை குறித்து மக்கள்
வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர் என்றும் தேரர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவையை மட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பொது மக்களின்
பணத்தை மீதப்படுத்துவதற்கு உதவும் என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர்
சங்கைக்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் தெரித்தார்.
அரசாங்க
தொழில்வாய்ப்புகளை வழங்கும்போது அறநெறிப் பாடசாலைகளின் இறுதி ஆண்டு மற்றும்
தர்மாச்சாரிய சான்றிதழ்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறைமையொன்றின்
அவசியத்தை சங்கைக்குரிய திவியகஹ யஸஸி தேரர் சுட்டிக்காட்டினார்.