சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களுக்கு சில விசேட வாய்ப்புகள் வழங்க தீர்மானம்
By: Nagaraj Tue, 22 Nov 2022 7:32:10 PM
கொழும்பு: சில விசேட வாய்ப்புகள்... 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சில விசேட வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, சுதந்திர தினமான அடுத்த வருடம் பெப்ரவரி 04ஆம் திகதி தேசிய பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களை இலவசமாக பார்வையிட பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்கள் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பை வழங்கும் வகையில்,
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில்
நுழைவுச்சீட்டுக் கட்டணத்தை 50 வீதத்தால் குறைக்கவும் அமைச்சரவை அனுமதி
வழங்கியுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.