அமெரிக்காவில் கொரோனா தொற்றின் மையமாக விளங்கிய நியுயார்க்கில் கட்டுப்பாடுகள் தளர்வு
By: Karunakaran Tue, 09 June 2020 12:28:16 PM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று மையமாக நியுயார்க் நகரம் உள்ளது. மற்ற மாகாணங்களை விட நியுயார்க்கில் தான் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது.
அமெரிக்காவின் 50 மாகாணஙகளில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் நியுயார்க் மாகாணத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் நியுயார்க் நகரத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 22 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
உலகின் தூங்கா நகரம் என்ற பெயர் பெற்ற நியுயார்க் நகரமும், மாகாணமும் கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கத்தின்கீழ் இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா பெரும் பொருளாதார சரிவை அடைந்துள்ளது. இந்த பொருளாதார சரிவில் நியுயார்க் முக்கிய பங்கு வகிக்கிறது. சூழலுக்கு ஏற்ப நியுயார்க் மக்கள் வாழ தொடங்கிவிட்டனர்.
நியுயார்க் நகரில் கொரோனா வைரஸின் முதல் பாதிப்பு பதிவாகி நேற்றுடன் 100 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் நேற்று கட்டுப்பாடு தளர்வு அமலுக்கு வந்துள்ளது. இதனால் சுமார் 4 லட்சம் பேர் நேற்று முதல் வேலைக்கு திரும்பினர். கட்டுமானத்துறை, ஜவுளித்துறை, சில்லரை விற்பனை கடைகள் ஆகியவை நேற்று பணிகளை தொடங்கின.
இருப்பினும் தற்போது இனவெறிக்கெதிரான போராட்டம் அங்கு நடைபெற்று வருவதால், நியூயார்க்கில் பெரும் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த போராட்டம் வர்த்தக நடவடிக்கைகளை பாதிக்கலாம். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதும் நியுயார்க் நகரம் பொருளாதாரத்தை சரிசெய்ய 2022-ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.