- வீடு›
- செய்திகள்›
- ககன்யான் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகள் மீண்டும் துவக்கம்
ககன்யான் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகள் மீண்டும் துவக்கம்
By: Nagaraj Sun, 24 May 2020 10:55:49 AM
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஷ்யாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ப'ககன்யான்' திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 4 இந்திய விண்வெளி வீரர்களுக்கான பயிற்சிகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும், 2022ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்திற்காக இந்திய விண்வெளி வீரர்கள், நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பிப்ரவரி, 10ம் தேதி முதல், பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்திய விண்வெளி வீரர்கள், தங்கள் பயிற்சிகளை மீண்டும் துவக்கியுள்ளதாக, ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான, 'ரோஸ்கோஸ்மோஸ்' தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜி.சி.டி.சி., எனப்படும் காகரின் ஆராய்ச்சி மற்றும் விண்வெளி வீரர்கள் பயிற்சி மையத்தில், இந்திய விண்வெளி வீரர்கள், தங்கள் பயிற்சிகளை, கடந்த,12 முதல், மீண்டும் துவங்கியுள்ளனர். நான்கு இந்திய வீரர்களும், நல்ல உடல்நலத்துடன் உள்ளனர்.
வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பயிற்சி மையம் முழுதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து ஊழியர்கள் மற்றும் பயிற்சி பெறும் வீரர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.