மணிப்பூரில் மீண்டும் கலவரம்... 35 ஆயிரம் மக்கள் பக்கத்து மாநிலங்களில் தஞ்சம்
By: Nagaraj Wed, 31 May 2023 3:10:40 PM
மணிப்பூர்: 35 ஆயிரம் மக்கள் வெளியேறினர்... மணிப்பூரில் மீண்டும் தொடரும் வன்முறையால், அம்மாநில மக்களில் 35,000க்கும் மேற்பட்டோர் அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு இனக் குழுக்கள் வசிக்கின்றனர். இதில் மலைப் பகுதிகளில், ’குக்கி’ என்ற பழங்குடியினரும், பள்ளத்தாக்குப் பகுதிகளில் ’மெய்டீஸ்’ என்ற பழங்குடியினர் அல்லாதவர்களும் அதிகளவில் வசிக்கின்றனர்.
இதில் மெய்டீஸ் சமூகத்தினர், ’மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் எங்களையும் சேர்க்க வேண்டும்’ என கோரிக்கை வைத்து, அதை நிறைவேற்றக் கோரி கடந்த 2012ஆம் ஆண்டு முதலே போராடி வருகின்றனர். இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் மணிப்பூர் உயர்நீதிமன்றம், ”மெய்டீஸ் மனுதாரர்களின் வழக்கை பரிசீலித்து அதன் பரிந்துரையை சமர்ப்பிக்கவும்” என மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குப் பிறகு மணிப்பூரில் இருதரப்புக்கும் கலவரம் வெடிக்க ஆரம்பித்தது.
இந்த வன்முறை மாநிலம் முழுக்க பரவிய நிலையில், இம்பால், சராசந்தூர், கங்போக்பி மாவட்டங்களில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் மணிப்பூரே தீயில் கருகியது. குறிப்பாக, 8 மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. கலவரம் பெரிய அளவில் ஏற்பட்டதால் மணிப்பூருக்கு ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், மணிப்பூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் இரு தரப்புக்கு இடையே கலவரம் வெடித்துள்ளது. இந்த வன்முறை காரணமாக, இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கலவரத்தை கட்டுப்படுத்த அம்மாநில அரசு மீண்டும் 5 நாட்களுக்கு இணையச் சேவையை முடக்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.