பெங்களூரு உள்பட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய சாலைகள்
By: Karunakaran Thu, 16 July 2020 09:51:17 AM
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கர்நாடகத்தில் இதுவரை 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா காரணமாக பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக பெங்களூருவில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது.
பெங்களூருவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையும் அதிவேகமாக உயர்ந்து வருவதால் பெங்களூரு நகர வாசிகள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில், பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவில் இருந்து வருகிற 22-ந் தேதி அதிகாலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூருவை போன்று பெங்களூரு புறநகர், கலபுரகி, தார்வார், யாதகிரி ஆகிய 4 மாவட்டங்களிலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை காய்கறி, பால், மளிகை கடைகள் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக நகரில் ஏராளமான ஓட்டல்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
அரசு பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் ஓடாததால் நகரின் பெரும்பாலான சாலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. ஊரடங்கு காரணமாக நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரில் 12 மணிக்கு மேல் தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களை போலீசார் பிடித்து, எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினர்.