வவுனியாவில் பலத்த காற்றால் கூரை வீட்டு தகடுகள் சேதம்
By: Nagaraj Tue, 01 Sept 2020 4:36:22 PM
பலத்த காற்றினால் கூரை தகடுகள் பறந்தன... வவுனியா கணேசபுரம் பகுதியில் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழையினால் பல வீடுகளின் கூரை தகடுகள் காற்றில் பறந்து செல்லபட்டுள்ளதுடன், பயன்தரும் மரங்களும் முற்றாக சரிந்துள்ளன.
அதற்கமைய கணேசபுரத்தில் வீசிய கடும் காற்றினால் 34 வீடுகளும் சமயபுரத்தில் 4 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
குறித்த வீடுகளின் கூரைத்தகடுகள் தூக்கி வீசப்பட்டமையால் வீடுகளிற்குள் தண்ணீர் சென்றுள்ள நிலையில் மக்கள் இருப்பதற்கு வசிப்பிடமின்றி அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை பலமான காற்று வீசியதால் வாழை, தென்னை போன்ற பயன் தரும் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.
இதேவேளை, பாதிப்பு விபரங்கள் தொடர்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தகவல்களை சேகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.