- வீடு›
- செய்திகள்›
- ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்ட செயல் - அகிலேஷ் யாதவ் விமர்சனம்
ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்ட செயல் - அகிலேஷ் யாதவ் விமர்சனம்
By: Karunakaran Fri, 10 July 2020 12:47:00 PM
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் டிஎஸ்பி உள்பட 8 போலீசார் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி விகாஸ் துபே 5 நாட்கள் தேடுதல் வேட்டைக்குபின் நேற்று மத்திய பிரதேசத்தில் போலீசாரிடம் சிக்கினான். விகாஸ் துபேக்கு 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புள்ளது.
விசாரணைக்கு பின் உத்தர பிரதேச போலீசில் விகாஸ் துபே ஒப்படைக்கப்பட்டான். உத்தர பிரதேச அதிரடிப்படை போலீசார், இன்று பலத்த பாதுகாப்புடன் கான்பூருக்கு விகாஸ் துபேவை கொண்டு வந்தபோது, விகாஸ் துபே இருந்த வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய ரவுடி விகாஸ் துபே, போலீசாரின் துப்பாக்கியை பறித்து தப்ப முயன்றதால் போலீசார் அவரை சுட்டு கொன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விகாஸ் துபே உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் சம்பவம் திட்டமிட்ட செயல் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், விகாஸ் துபேவை அழைத்துச் சென்ற கார் கவிழவில்லை, கவிழ்க்கப்பட்டுள்ளது. ரகசியங்களால் கவிழ்க்கப்படுவதிலிருந்து உத்தர பிரதேச அரசாங்கம் காப்பாற்றப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் விகாஸ் துபே கைது செய்யப்பட்டாரா? அல்லது சரண் அடைந்தாரா? என்பது குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.