பெங்களூரில் தொழில் அதிபரிடம் தரமான முக கவசம் வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி
By: Karunakaran Mon, 22 June 2020 11:58:14 AM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவுக்கு தற்போது வரை மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் கொரோனா பரவலில் இருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை பின்பற்ற வலியுறுத்தப்படுகிறது. இதனால் மக்களிடம் அதிகளவில் முகக்கவச பயன்பாடு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பெங்களூரு சிக்பேட்டையை சேர்ந்த வசந்த் என்ற தொழில்அதிபர், கொரோனா வைரஸ் பீதியால் முக கவசங்களின் விற்பனை அதிகமாக நடைபெற்று வருவதால் முக கவசங்களை வாங்கி விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு வீரேஷ் மற்றும் மதுகவுடா ஆகிய 2 பேருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக தரமான மற்றும் பிரபல நிறுவனங்களின் முக கவசங்களை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.
இதனை நம்பிய வசந்த் ராஜராஜேசுவரிநகரில் வைத்து ரூ.50 லட்சத்தை வீரேசிடம் வசந்த் கொடுத்துள்ளார். அப்போது வீரேஷ் கொடுத்த சில முக கவசங்கள் வசந்திற்கு பிடித்துவிட்டதால், அடுத்த சில நாட்களில் மேலும் முகக்கவசங்கள் வாங்க ரூ.50 லட்சத்தை வீரேஷ் வங்கி கணக்குக்கு வசந்த் அனுப்பி வைத்துள்ளார். ரூ.1 கோடிக்கு முக கவசங்கள் தருவதாக கூறிய இருவரும் முக கவசங்களை கொடுக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் தலைமறைவாகி விட்டனர்.
இதனால் வசந்த் அவர்களை தொடர்பு கொண்டபோது, இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் அவர்கள் 2 பேரும் ஒரு தொலைகாட்சி சேனலில் பணியாற்றியது வசந்திற்கு தெரியவந்துள்ளது. பின்னர் இதுகுறித்து வசந்த் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரேஷ், மதுகவுடாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.