தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி; கூடுதல் பாதுகாப்பு
By: Nagaraj Fri, 14 Apr 2023 08:19:08 AM
சென்னை: கூடுதலாக பாதுகாப்பு படைகள் கண்காணிப்பு... தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த அனுமதி கிடைத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பதட்டமான பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்பு படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
சென்ற ஆண்டு போல் நடப்பாண்டிலும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதில் சர்ச்சை எழுந்தது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை ஒப்பிட்டு காவல்துறை அனுமதியளிக்க மறுத்தது. இதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிர்வாகிகள் உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள்.
இதனை விசாரித்த தனி நீதிபதி 6 இடங்களை தவிர 44 இடங்களில் உள்ள அரங்குகளில் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். உயர்நீதிமன்றம் பேரணிக்கு அனுமதியளித்ததை தொடர்ந்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ஆஜராகி வாதாடியவர்கள், தமிழக அரசின் முடிவு ஒரு தனிப்பட்ட காரணம் என்றும், கூட்டணி கட்சிகளின் மனித சங்கிலிக்கு அனுமதி அளித்து விட்டு ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு மட்டும் தடை விதிப்பது எப்படி சரியாகும் என்று வாதிட்டனர்.
உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் ஒழுக்கத்தை கடைபிடித்து பேரணி நடத்த வேண்டும் என்றும், பிறரை தூண்டும் வகையில் செயல்பாடுகள் இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினர்.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து பேரணி நடத்துவது உறுதியாகியிருக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இதையெடுத்து தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.