விஷம் கலந்த டீ-யை குடித்ததால் கோமா நிலைக்கு சென்ற ரஷிய எதிர்க்கட்சி தலைவர்
By: Karunakaran Sat, 22 Aug 2020 12:53:00 PM
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக அலெக்ஸி நவல்னி செயல்பட்டு வருகின்றார். அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அலெக்ஸி நவல்னி, போராட்டங்களின் போது கைது நடவடிக்கைகளையும் சந்தித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு அலெக்ஸி பயணம் மேற்கொண்டார்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் விமானம் அவசர அவசரமாக ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஒம்சக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நவல்னி கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நவல்னி கட்சியின் செய்தித்தொடர்பாளர் கிரா யார்ம்ஸ், நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், நவல்னி காலை முதல் எந்த உணவும் சாப்பிடவில்லை. விமான நிலையத்தில் வைத்து டீ (தேனீர்) மட்டுமே குடித்தார். அவர் குடித்த டீ-யில் தான் விஷம் கலந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நவல்னிக்கு மேல் சிகிச்சை அளிக்க ஜெர்மனியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் முன்வந்தது. நவல்னியை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று மேல்சிகிச்சை அளிக்க புதின் நிர்வாகம் அனுமதி வழங்கியதையடுத்து, அவரை தனி விமானம் மூலம் ஜெர்மனிக்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகமும் அனுமதி வழங்கியது. விஷம் கலக்கப்பட்ட டீ-யை குடித்ததால் கோமா நிலைக்கு சென்றுள்ள ரஷிய எதிர்கட்சி தலைவர் நவல்னிக்கு உரிய மேல்சிகிச்சை அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.