ரஷிய நாட்டுத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி காலமானார் - மு.க.ஸ்டாலின் இரங்கல்
By: Monisha Thu, 19 Nov 2020 12:08:10 PM
ரஷிய நாட்டுத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நேற்று மாஸ்கோவில் கொரோனா பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 79. 1941-ல் பிறந்த அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றவர். தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் நல்ல புலமை பெற்ற துப்யான்ஸ்கி மறைவுக்கு தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
துப்யான்ஸ்கியின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு:-
செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்த ரஷிய நாட்டுத் தமிழறிஞர் - ஆய்வாளர் - பேராசிரியர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி கொரோனா பெருந்தொற்றால் மறைவெய்தியது ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
பொன்னியும் வைகையும் பொருநையும் இன்னும் பல ஆறுகளும் பாய்ந்து வளம் செழிக்கச் செய்த தமிழ்ப் பண்பாட்டினை, இலக்கியத்தினை, வரலாற்றினை, வால்கா நதி பாயும் ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்றுவித்தவர் துப்யான்ஸ்கி.
துப்யான்ஸ்கியின் இறப்பு தமிழ் மொழி ஆய்வுத் தளத்தில் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு திமுக தலைவர் என்ற முறையிலும் கருணாநிதியின் மகன் என்ற முறையிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மேற்கொண்ட பணிகளைத் தொடர்ந்திடச் செய்வதே அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.