ஆகஸ்டு மாதத்தில் ரஷ்யாவின் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என தகவல்
By: Karunakaran Fri, 31 July 2020 11:40:30 AM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.70 கோடியைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 6.70 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. பாரத் பயோடெக்கின் கோவேக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிட்ஷீல்டு, ஜைடஸ் கேடிலாவின் ஜைகோவ்-டி, ரஷ்ய நாட்டின் பாதுகாப்புத்துறை சார்பில் இயங்கும் கமலேயா தொற்று நோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தடுப்பூசி என பல தடுப்பூசிகள் இந்த போட்டியில் உள்ளன.
இந்நிலையில், கமலேயா தொற்று நோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தடுப்பூசி ஆகஸ்டு 10-12ம் தேதிகளுக்குள் பதிவு செய்யப்பட்டு விடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த தடுப்பூசியை கட்டுப்பாட்டாளர்கள் பதிவு செய்து 3 அல்லது 7 நாட்களுக்குள் அது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என ரஷ்யாவின் புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து புளூம்பெர்க் செய்தியில், கமலேயா தடுப்பூசி ஆகஸ்டு மாதத்தில் நிபந்தனை பதிவு பெற வாய்ப்பு உள்ளது. அதாவது, மூன்றாவது கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டாலும்கூட, இதன் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். மருத்துவ பரிசோதனைகள் முடியும் வரையில் தடுப்பூசி சுகாதார நிபுணர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.