பக்தர்கள் வருகைக்கு சபரிமலை கோவில் தற்காலிக தடை
By: vaithegi Thu, 04 Aug 2022 8:47:40 PM
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த ஒரு வாரமாகவே கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் உயர்ந்து உள்ளது. இதனால் இடுக்கி அணையின் நீர்மட்டம் மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் அணைக்கு நீல நிற எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
கேரளாவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதன் காரணமாக கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதற்கிடையே மழைக்கு வீடு இடிந்தும், வெள்ளத்தில் சிக்கியும் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர். மலையோர மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி உள்ளது.
இதை தொடர்ந்து ஏனைய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பை, மணிமாலா மற்றும் அச்சன்கோவில் ஆகிய பல்வேறு ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டுகிறது.
மேலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக, பல குடும்பங்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் அவர்கள் தெரிவித்தனர்.