டெல்லியில் கடந்த ஒரு மாதத்தில் 3 முறை நிலநடுக்கம்; புவியியல் ஆய்வு மையம் தகவல்
By: Nagaraj Mon, 11 May 2020 12:52:30 PM
கடந்த ஒரு மாதத்தில் 3 முறை நிலநடுக்கம்... டெல்லியில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த ஒரு மாதத்துக்குள் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் அதனை ஒட்டியபகுதிகளில் நேற்று பிற்பகல் லேசான நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது. இந்த தகவலை தேசிய புவியியல் ஆய்வு மையத்தின் தலைவர் ஜே.எல். கவுதம் தெரிவித்தார்.
வடகிழக்கு டெல்லியில் வசீர்புரை மையமாகக் கொண்டு, பூமிக்கடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் லேசாக உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் இதனால் உயிர்ச்சேதமோ, கட்டிடங்களுக்கு பாதிப்போ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு மாதத்தில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் 12, 13-ம் தேதிகளில், இதே வடகிழக்கு டெல்லி பகுதியை மையமாக கொண்டு இருமுறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அப்போது முறையே 3.5 மற்றும் 2.7 என ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது.