பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல்
By: Karunakaran Sun, 28 June 2020 10:01:08 AM
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அடைக்கப்பட்டனர். சசிகலாவுக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்தும் அவர் அபராதம் இதுவரை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. அபராதத்தை செலுத்தாவிட்டால் மேலும் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா 1997-ம் ஆண்டு 13 நாட்கள் சென்னை சிறையிலும், கடந்த 2014-ம் ஆண்டு 24 நாட்கள் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையிலும் இருந்ததால், அவரது தண்டனை காலத்தில் 37 நாட்கள் கழிக்கப்பட்டுவிடும். மேலும் ஆண்டுக்கு சுமார் ஒரு மாதம் தண்டணை கைதிகளுக்கு அளிக்கப்படும் விடுமுறை தண்டணை காலத்தில் கழிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும், சிறை சூப்பிரண்டு, தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தண்டனை கைதிகளுக்கு அதிகபட்சமாக 2 மாதங்கள் வரை தண்டனை காலத்தை குறைக்கலாம். சிறை சூப்பிரண்டு இந்த சலுகையை சசிகலாவுக்கு அளிக்கவில்லை எனில், சசிகலா அக்டோபர் மாதம் தான் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளது. ஒருவேளை சிறை சூப்பிரண்டு சலுகையை வழங்கினால், ஆகஸ்டு 14-ந் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளது.
பொருளாதார குற்றம் இழைத்தவர்களுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என்று சிறைத்துறை விதிமுறைகள் கூறுவதால், நன்னடத்தை விதிகள் சசிகலாவுக்கு பொருந்தாது என சிறைத்துறை உயர் அதிகாரியாக இருந்த மேக்ரிக் கூறியுள்ளார். இதனால் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.