சசிகலாவின் தண்டனை காலம் குறைக்கப்பட வாய்ப்பில்லை: சிறைத்துறை வட்டாரங்கள் தகவல்
By: Nagaraj Mon, 29 June 2020 3:21:01 PM
தண்டனைக்காலம் குறையாது... சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் அடிப்படையில் தண்டனைக் காலம் குறைக்கப்பட வாய்ப்பில்லை என்று கர்நாடக சிறைத்துறை வட்டாரங்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக பா.ஜ.க நிர்வாகி ஆசிர்வாதம் ஆச்சாரி கூறியிருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க வட்டாரத்தில் அது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் அ.தி.மு.க என்ன ஆகும் என்ற விவாதமும் எழுந்தது. ஆனால் ஆகஸ்ட் 14ம் தேதி சிறையில் இருந்து சசிகலா வெளியாக உள்ளதாக வெளியான தகவலை கர்நாடக சிறைத்துறை மறுத்தது. மேலும், அவர் எப்போது விடுதலையாவார் என்று தற்போது கூற முடியாது என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில் அடுத்த 30 நாளில் சிறையில் இருந்து வெளியாக உள்ளவர்கள்
பட்டியலை கர்நாடக சிறைத்துறை வெளியிட்டுள்ளது. அதில் சசிகலா பெயர் இல்லை.
இது குறித்து கர்நாடக சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ஒவ்வொரு
மாதமும் இப்படி பட்டியல் வெளியிடப்படுவது வழக்கமான ஒன்று. சசிகலாவைப்
பொருத்தவரை அவர் மீது சிறையில் இருக்கும்போது விதிமுறைகளை மீறியதாக
குற்றச்சாட்டு உள்ளது.
சிறைத்துறை இயக்குநராக இருந்த ரூபா இது பற்றி
அளித்த புகார் இன்னும் விசாரணையில் உள்ளது. அப்படி இருக்கும்போது
சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது. மேலும், சசிகலாவின்
தண்டனைக்காலம் முடிய இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. அவர் அபராதம்
செலுத்தியது தொடர்பான தகவல் இல்லை.
அதனால், எப்போது அவர்
விடுதலையாவார் என்று கூற முடியாது. இருப்பினும் அனைத்தும் சிறைத்துறைத்
தலைவர் கையில் உள்ளது. அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொறுத்தே
சசிகலாவின் விடுதலை அமையும் என்றனர்.
“கர்நாடக சிறைத்துறை
விதிகள்படி கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு மட்டும்
நன்னடத்தை அடிப்படையில் தண்டனைக் காலம் குறைக்கப்படுவதாகவும், சசிகலா
தண்டனை பெற்ற வழக்கிற்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது” என்று கர்நாடக
சிறைத்துறை டி.ஜி.பி முன்பு பேட்டி அளித்திருந்தது.