இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாக்கி அழித்ததாக சவுதி கூட்டுப்படை அறிவிப்பு
By: Karunakaran Mon, 17 Aug 2020 4:59:20 PM
கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஏமன் அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இதில் ஈரான் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. ஈரான் ஆதரவுடன் ஏமன் நாட்டின் சில பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர்.
ஏமன் அரசுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு தெரிவித்து வருவதால், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது சவுதி அரேபியா மீதும் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மீது ஹவுதி கிளர்ச்சியாரகள் ஏவுகணை தாக்குல் நடத்தினர்.
நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொலைக்காட்சியை அல் மசிரா, சவுதி கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஹவுதி பிராந்தியத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையின் எரிவாயு டேங்க்குகள் சேதமடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் அதேநேரத்தில், கடந்த வியாழக்கிழமை தெற்கு சவுதி அரேபியாவை இலக்காக வைத்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக சவுதி கூட்டுப்படை தெரிவித்துள்ளது. பாலிஸ்டிக் ஏவுகணை என்பது நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. அணு போன்ற பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை சுமந்து சென்ற இலக்கை சரியாக தாக்கும் திறமை கொண்டதாகும்.