மாணவர்களுக்கு புதிய கற்பித்தல் திறன்களை நடைமுறைப்படுத்த பள்ளி கல்வி துறை முடிவு
By: vaithegi Fri, 12 Aug 2022 11:31:09 AM
சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால் மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டன. குழந்தைகளுக்கு இந்த நோய் எளிதில் பரவும் என்பதால் அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டது. இதை அடுத்து தனியார் பள்ளிகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தி வந்தன.
அதன் பின்பு தொற்று குறைய தொடங்கிய நிலையில் சுழற்சி முறையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நடைபெற்றன. கொரோனா காலத்தில் பள்ளிகள் செயல்படாமல் இருந்ததால் மாணவர்களிடையே கற்றல் திறன் மிகவும் குறைந்துள்ளதாக பெற்றோர்கள் மற்றும் குழந்தை நல ஆர்வலர்கள் பெரும் கவலை தெரிவித்திருந்தனர்.
மேலும் இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள், மாணவர்களின் மன உறுதியை மேம்படுத்தும் விதமாக விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி வந்தது
இந்நிலையில் 2023-2024 ம் கல்வியாண்டில் 4 மற்றும் 5 ம் வகுப்புகளுக்கான கற்றல் திறனை மேம்படுத்துவது குறித்து மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 4,5 வகுப்புகளை கையாளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இணைப்பில் உள்ள தொடக்க கல்வி ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களைக் கொண்டு 12.8.2022 அன்று காலை 10 மணிக்கு டாக்டர்.எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கட்டிடத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.