எப்போது தொற்று குறைகிறதோ அப்போது தான் பள்ளிகள் திறக்கப்படும்; அமைச்சர் தகவல்
By: Monisha Thu, 15 Oct 2020 10:31:46 AM
எப்போது தொற்று குறைகிறதோ அப்போது தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
காட்பாடியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வந்தார். பின்னர் நிகழ்ச்சி முடித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளிகள் திறப்பு குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. ஏனென்றால் ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 26 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும், சில உயிர் பலியும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் எப்போது தொற்று குறைகிறதோ அப்போது தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும். இது குறித்து முறையாக முதல்-அமைச்சர் அறிவிப்பார்.
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவெடுத்து சட்டம் இயற்றி அதனை இந்த ஆண்டே செயல்படுத்த முழு முயற்சியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.